5 அடி உயரத்துக்கு வீட்டை உயர்த்தி சாதனை

திருவொற்றியூர் கலைஞர் நகர் 9-வது தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதி. இவர்கள் சுமார் 35 வருட பழமையான வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. அடிக்கடி இதுபோல் நடப்பதால் வீட்டுக்குள் வசிக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதனால் ராமகிருஷ்ணன், தனது வீட்டை பழமை மாறாமலும் அதே நேரத்தில் 5 அடி உயரத்துக்கு தூக்கி கட்ட விரும்பினார்.
இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள பாட்னாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் மூலம் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் வீட்டின் தரைத்தளத்தை சுமார் 5 அடி உயரம் தூக்கி கட்ட முடிவு செய்தார். அதன்படி 45 ஜாக்கிகளை கொண்டு 40 ஊழியர்கள் வீட்டின் கட்டிடத்தை அறுத்து எடுத்து கான்கிரீட் போட்டு பழமை மாறாமலும், வீட்டில் எந்த விரிசலும் ஏற்படாமலும் தரையில் இருந்து சுமார் 5 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டிமுடித்தனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் ராம கிருஷ்ணன் கூறும்போது, “நான் வசித்து வந்த வீட்டை பழமை மாறாமல் கட்டுவதற்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர்.
ஆனால் பாட்னாவில் இருந்து வந்த ஊழியர்கள் புதிய தொழில் நுட்பத்துடன் 20 சதவீத செலவில் வீட்டை பழமை மாறாமல் 5 அடி உயர்த்தி கட்டி சாதனை படைத்து உள்ளனர்” என்றார்.

scroll to top