வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப் படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவை முற்றிலும் தடுக்க, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகஅரசு மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இனி வரும் நாட்களில், வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 சதவிகித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவிகிதம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பதிலாக, வாரந்தோறும் இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்கிடும் நோக்கத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பொது இடங்களிலும், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகி யோரையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணை ந்து மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும். திங்கட்கிழமை தவிர இதர நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

scroll to top