விருதுநகரில், பாதயாத்திரை சென்ற மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்ததைக் கண்டித்து, மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர். சோழவந்தான் தொகுதி சார்பாக பாரதிய ஜனதா கட்சியினர், வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் செய்தனர். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டதை கண்டித்து, வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத் தலைவர் வாசுதேவன் தலைமையில், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்கள் முருகேஸ்வரி, கண்ணன் முன்னாள் மாவட்ட தலைவர் சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து சோழவந்தான் தொகுதி ஒன்றியத்தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட அணிப்பிரிவு நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் அனைத்து பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் 4 பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வாடிப்பட்டியில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 4 பெண்கள் உட்பட 29 பேர் கைது
