காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடர்ந்தனர். இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அதே சமயம் ராகுல் காந்தி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜாமீனும் உடனடியாக வழங்கப்பட்டது.இந்நிலையில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்ததற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக என்று முழக்கமிட்ட வாரு ரயில் நிலையத்தின் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர் அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.