பாஜகவின் த்ணை அமைப்பான ஏபிவிபி, தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலையின் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், ஏபிவிபி முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிப்பில், “தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சிபிசிஐடி சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி சுப்பிரமணியம் வழக்கை சிபிஐ விசாரிக்க ஆணையிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவு தமிழக பாஜகவிற்கு கிடைத்த வெற்றியாகக் கருதி அண்ணாமலை மகிழ்ச்சிக் கடலில் நீந்த முற்பட்டிருக்கிறார். எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிற அண்ணாமலை, இந்த பிரச்சினையை மிகப் பெரிய வெற்றியாக நினைத்து புளகாங்கிதம் அடைகிறார். சமீபத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார். அதற்குப் பிறகும் இதில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்ணாமலையும், மற்றவர்களும் கற்பனைகளை நாள்தோறும் அவிழ்த்து விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என பாஜக கனவு காண்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் எத்தகைய படுதோல்வியை தமிழக மக்கள் பாஜக, அதிமுகவிற்கு வழங்கினார்களோ, அதைவிட கூடுதலான தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும்; வழங்கப் போவது உறுதி. இதன் மூலம் உரிய பாடத்தை பாஜக, அதிமுக பெறப் போகிறது.