நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது பள்ளியில் மார்ச் 6ம் தேதி எட்டாம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து நான்கு பேரும் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேற்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
நால்வரின் உடல்நிலையையும் மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில் அதில் மூன்று மாணவிகளின் உடல்நிலை சீரானது. இந்நிலையில் சைஃபா பாத்திமா(13) என்ற ஒரு மாணவியின் உடல் நிலை மோசமாகி கொண்டே சென்றதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வியாழக்கிழமை மாலை மாணவியை அழைத்து போது சேலம் அருகே மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் உடனே சேலம் குமாரப்பாளையம் அரசு மருத்துக்கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.