பேரூர் கோயிலுக்கு திதி கொடுக்க வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனலட்சுமியின் அக்காவிற்கு திதி கொடுப்பதற்காக நாராயணசாமி, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கோவை வந்தனர். முன்னதாக பேரூர் படித்துறை திதி கொடுத்துவிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் காலபைரவர் சன்னதியில் தரிசனம் செய்த போது நாராயணசாமி திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர். அதில் வந்த அவசரகால மருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பேரூர் கிராம நிர்வாக அலுவலர், பேரூர் போலீசார் விசாரணைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததால் பேரூர் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் வாஸ்து சாந்தி செய்து நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது