மாநில பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசியவர், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் இருக்கிறது? வெளிநாடு சென்றுவந்தவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பார்கள். ஆனால் பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவந்ததும் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி என்றால் உடனடியாக வந்துவிடுவார். அவர் ஓய்வின்றி உழைக்கிறார். அவரை விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு 4வது மாதம்தான் காது உருவாகும், 5வது மாதம் வாய் உருவாகும். விமர்சனம் செய்கிறவர்களை 3 மாசத்தில் பிறந்தவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதை இவனும் பேச மாட்டான். பிறர் சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்! நடிகர் பாக்யராஜ்
