விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (27). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாத்திமா (24) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. செவிலியர் படித்து முடித்திருந்த பாத்திமா, திருவில்லிபுத்தூரில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையான கூடலிங்கம் அடிக்கடி மனைவி பாத்திமாவுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பாத்திமா, வீட்டிற்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது உடல்நிலை மோசமடையவே, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.