விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ரெங்கையன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (40). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சக்திபிரியா (15). இவர் திருச்சுழி அருகேயுள்ள பனையூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி சக்திபிரியா, பள்ளிக்கு தினமும் அரசு பேருந்தில் சென்று வருவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல பள்ளி சென்ற மாணவி, மாலையில் பனையூரில் இருந்து, பூமாலைப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி ரெங்கையன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி சக்திபிரியா, பேருந்தின் முன்புற படிக்கட்டில் நின்றுகொண்டு வந்தார். அப்போது பேருந்து படிக்கட்டிலிருந்து மாணவி சக்திபிரியா தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனலி்க்காமல் சக்திபிரியா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருச்சுழி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவி, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.