கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும், அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டிற்கு சசிகலாவை அழைப்பது குறித்து ஒவ்வொன்றாக அறிவிப்புகள் வரும் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
பெரியகுளம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழா, கழகம் தோற்றுவிட்டு 50 ஆண்டுகள் பரிபூரண வெற்றியடைந்து 51 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விழா என முப்பெரும் விழாவாக திருச்சி மாநகரில் வரும் 24ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் இருக்கிற அதிமுக தொண்டர்கள் அங்கு இலட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை அங்கே நிரூபிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு:
உறுதியாக கட்சியிலிருந்து, கட்சியில் தான் அவர்கள் இருக்கிறார்கள், மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும், அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு:
நீங்கள் நேரடியாக பார்க்கத்தான் போகிறீர்கள்.
சசிகலா போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு:
முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும் அனைவரும் கலந்து கொள்வார்கள்.