திமுக கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன.  பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள். இதையொட்டி கூட்டணி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே பல கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து வருகிறது. இவை அனைத்தும் இன்று மாலைக்குள் முடிவு பெறும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில்  5 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம் இரு கட்சிகள் இடையே கையெழுத்தானது. அதன்படி, நெற்குன்றம் – 148வது வார்டு, மயிலாப்பூர் – 123 வது வார்டு, கே.பி.பார்க் – 77 வது வார்டு, திருவெற்றியூர் – 4வது வார்டு, ஆர்.கே,நகர் – 41வது வார்டு ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

scroll to top