தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு

மதுரை எஸ். எஸ். காலனி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்கிற இளைஞருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சினைக் காரணமாக பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வளைவுகளில் மீதேறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இளைஞரை கண்டதும் அவரை கீழே இறங்கி வரும்படி எச்சரித்தனர். தொடர்ந்து, அந்த இளைஞர் மதுரை எஸ். எஸ் .காலனி போலீசார் தன் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும்,
இதனால், மன உளைச்சல் அடைந்து தற்கொலை முயற்சி செய்வதாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், எஸ். எஸ். காலனி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த எஸ். எஸ். காலனி நிலைய காவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை இளைஞரை தற்கொலை செய்ய விடாமல் இறங்கிவர செய்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முழு ஊரடங்கு என்பதால், சாலைகள் வெறிச்சோடிய நிலையில் உள்ளதை பயன்படுத்தி பாலத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பாண்டியராஜன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மேலும் இந்த காலத்தில் அடிக்கடி தொடர்ந்து பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில மாதம் முன் இது போன்று ஒரு நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும் .

scroll to top