கோவையில் ‘சரணாலயம்’ என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது . பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த காப்பகத்தில் ஒரு பெற்றோர், பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை தங்களால் பார்த்து கொள்ள முடியாத காரணத்தால் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த குழந்தைக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட தால்,சரணாலய காப்பக நிர்வாகத்தினர், குழந்தைக்கு செய்ய வேண்டிய மருத்துவம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.ஆட்சியர் சமீரன் குழந்தைக்கு செய்ய வேண்டிய அவசர மருத்துவ நிலையை புரிந்து கொண்டு குழந்தைக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க சிறப்பு பரிந்துரை மேற்கொண்டார். அதன்படி, குழந்தைக்கான மருத்துவ காப்பீடு அட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் காப்பக நிர்வாகிகளிடம் வழங்கினார். இதன் மூலம் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்தி குழந்தைக்கு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.பிறந்து 40 நாட்களே ஆன குழந்தைக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திரா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சுந்தர், காப்பீட்டு திட்ட அலுவலர் கிஷோர்குமார், மாவட்ட அலுவலர் கருணா மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர் .
தமிழகத்தில் முதல் முறையாக பிறந்த குழந்தைக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை
