சென்னையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.  இதனைத் தொடர்ந்து வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.  இதனையடுத்து அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன. இந்த அணிவகுப்பில் முதல் வாகனமாக வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.  அதனைத் தொடர்ந்து மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் கூடிய அலங்கார ஊர்தி வலம் வந்தது. மேலும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்தி வலம் வந்தது. அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இடம்பெற்றன. கொரோனா பரவலால் இந்த ஆண்டு 30 நிமிடங்களில் குடியரசு நாள் விழா நிறைவு பெற்றது. வழக்கமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடியரசு நாள் விழா நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.

scroll to top