சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.தொடர்ந்து காவல்துறையில் வீர தீர செயல்களை செய்த 66 பேருக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி, வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட விளையாட்டு துறை, தென்னை ஆராய்ச்சி மையம், கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் துறை, மாவட்ட ஆலோசனை மையம் என இந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய 176 பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் சிறப்பாக சேவை செய்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ,சவுரிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட முன்மாதிரி கிராம விருதை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் பெற்றது. இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் எஸ்.அரசு, மண்டலத் தலைவர்கள் வே.கதிர்வேல், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்படி சுதந்திர தின விழா கோவை முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் 1650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழா கொண்டாடம்: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மறியாதைசெய்தார்
