சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகளில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்ததும், அவரை போல மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சேலத்தைச் சேர்ந்த நபருக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு புதன்கிழமை வெளியானது . அதில் அவருக்கு கொரோனா உறுதியானது தெரிய வந்தது .
மேலும் அவருக்கு எந்த வகையான கொரோனா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.