திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்கரான் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, 10.01.2022 (திங்கள் கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசினம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே, திருக்கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.