புதுடெல்லியில் வருகிற ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் எஸ். நவீன் சங்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நாட்டின் குடியரசு தினவிழா வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அண்மையில் பெங்களூருவில் குடியரசு தின அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் எஸ். நவீன் சங்கர், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மாணவருக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி, தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் முனைவர் சி. சாமுவேல் செல்லையா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். பிரகதீஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.