காவல்துறையினர் மதச்சார்பற்ற கோட்பாடுகளை கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்தா காலனியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்த போது, ‘காந்தியை கொலை செய்தது கோட்சே’ என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும், காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்துள்ளனர். ‘காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நீதிமன்றமே அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது. காவல்துறை அந்த வாசகத்தை எதிர்த்து இடையூறு செய்வது சரியல்ல’ என்று ஜி.ராமகிருஷ்ணன் பலமுறை தெரிவித்தும் வாக்குவாதத்தை அதிகாரிகள் நிறுத்தவில்லை.கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.