காரியாபட்டி பகுதியில் வேளாண் சேவை மையங்கள் அமைக்கப்படும் என்ற விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் , சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் 8-வதுஆண்டு பொதுக் குழுக் கூட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் அசேபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிட்ஸ் நிறுவனத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னோடி விவசாயி .சந்திரன் வரவேற்றார். சீட்ஸ் முதன்மை செயல் அலுவலர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். அசேபா நிறுவன ஸ்தாபகர் -செயல் இயக்குநர் லோகநாதன் விவசாயிகளுக்கு, வேளாண் கடன் அட்டைகளை வழங்கி சிறப்புரை
யாற்றினார். தொடர்பு மேலாளர் சுரேஷ்பாபு, யூனியன் வங்கி மேலாளர் செளந்தரலிங்கம், அவந்தி பைனான்ஸ் மண்டல மேலாளர் குருசாமி, சீட்ஸ் ஆதார நிறுவன திட்ட ஒருங்கிணைப் பாளர் பாண்டியராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். விழா முடிவில், பசுமை காடுகள் திட்டத்தில் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது . சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக விவசாயிகளின் நிலத்தில், மண்பரிசோதனை செய்தல், வேளாண் சேவை மையங்கள் அமைப்பது, மெட்ரோ நகரங்களில் சீட்ஸ் விற்பனை நிலையங்கள் அமைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.