அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் 500 கோடி ஊழல் புகார் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதை கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவருடைய வீட்டின் முன்பு கூடியிருந்த கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி,விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் குவிந்து வருகின்றனர். இதன் காரணத்தால்7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். கைது செய்யும் போது காவல்துறையினருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .இதனிடையே, இந்த சோதனையை கண்டித்து அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளின் முன்பு குவிந்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதுபோன்ற சோதனைகளை திமுக அரசு அடிக்கடி ஏவி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை : எதிர்ப்பு தெரிவித்த ௭ அதிமுக எம்.எல்.ஏக்களுடன் 100க்கும் மேற்பட்டோர் கைது
