தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள சூழலில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கோவை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் இணை செயலாளர் ஷர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி 38வது வார்டில் போட்டியிடுகிறார்.அவர் இன்று மதியம் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை அதிமுக.கவின் எஃகு கோட்டையாக உள்ளது. 38 வது வார்டில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். எனது வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 6 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளேன்.10 ஆண்டுகளாக பொதுவாழ்வில் உள்ளேன். நாங்கள் அறக்கட்டளை நடத்தி வருகிறோம். பெண்களை மனதில் வைத்து பல நலத்திட்டங்கள் செய்துள்ளோம் என்று கூறினார். மனு அளிக்கும் போது புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தார்.
அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கும் உதவி பேராசிரியர் ஷர்மிளா சந்திரசேகர்
