சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் பங்கேற்க இன்று ஒரு நாள் தடை விதித்து அவைத் தலைவர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டு, எதிர்க்கட்சியின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அவையில் வலியுறுத்தினார்.இதனையேற்று, பழனிசாமி அணியினர் இன்று அவையில் பங்கேற்க தடை விதித்து அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.முன்னதாக, அவை தொடங்கியதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற அவை பாதுகாவலர்களுக்கு அவைத் தலைவர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் அனைவரும், அவைத் தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அவைக்கு வெளியே தர்னாவில் ஈடுபட்டனர்.
“அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் சட்டப்பேரவையில் பங்கேற்க தடை” அப்பாவு உத்தரவு
